பேச்சு சுதந்திரத்திற்கு மாபெரும் வெற்றி – பிரித்தானிய உயர் நீதிமன்றத்தின் வரலாற்றுத் தீர்ப்பு
பிரித்தானியாவில் பலஸ்தீன ஆதரவு பிரச்சார அமைப்பான பலஸ்தீன் ஆக்ஷன் (Palestine Action) ஐ பயங்கரவாதக் குழு என வகைப்படுத்தி தடை செய்த அரசாங்கத்தின் முடிவு சட்டவிரோதமானது என பிரித்தானிய உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட இந்த முக்கிய தீர்ப்புக்கு பதிலளித்த அமைப்பின் இணை நிறுவனர் ஹுடா அம்மோரி (Huda Ammori) இது பிரித்தானியாவில் அடிப்படை சுதந்திரங்களுக்கும், பலஸ்தீன மக்களின் சுதந்திரப் போராட்டத்திற்கும் கிடைத்த பெரிய வெற்றி என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தத் தடை முடிவு, சமீபத்திய பிரித்தானிய வரலாற்றில் பேச்சு சுதந்திரத்தின் மீது நடத்தப்பட்ட கடுமையான தாக்குதல்களில் ஒன்றாக நினைவில் இருக்கும் என்றும் அவர் கூறினார்.
கடந்த ஜூன் மாதம், பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்களின் கீழ் பலஸ்தீன் ஆக்ஷன் (Palestine Action) அமைப்பை தடை செய்வதாக பிரித்தானியா அறிவித்தது.
இந்தத் தடை காரணமாக, அந்த அமைப்பு Al-Qaeda (அல்-கொய்தா) மற்றும் ISIL ( ஐ.எஸ்.ஐ.எல் / ஐ.எஸ்.ஐ.எஸ்) போன்ற ஆயுதக் குழுக்களுடன் ஒரே பட்டியலில் சேர்க்கப்பட்டது. இதனால் அந்த அமைப்பில் உறுப்பினராக இருப்பதும் குற்றமாகக் கருதப்பட்டது.
அரசாங்கத்தின் இந்த முடிவு சட்டப் போராட்டங்களைத் தூண்டியதுடன், மனித உரிமை அமைப்புகளின் கடும் விமர்சனங்களையும் பொதுமக்கள் எதிர்ப்புகளையும் ஏற்படுத்தியது.





