லூவ்ரே அருங்காட்சியகத்தில் இடம்பெற்ற பாரிய மோசடி : ஒரு தசாப்தத்தில் 10 மில்லியன் கொள்ளை!
பிரான்ஸின் லூவ்ரே (Louvre) அருங்காட்சியகத்தில் கடந்த 10 ஆண்டு காலப்பகுதியில் டிக்கெட் மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 09 பேர் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 10 மில்லியன் யூரோ வரையில் மோசடி செய்யப்பட்டதாக வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் கடந்த 2024 ஆம் ஆண்டு முறைப்பாடு அளிக்கப்பட்டதாகவும், வழக்கு விசாரணைகளுக்கு அமைய கடந்த செவ்வாய்க்கிழமை சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு லூவ்ரே ஊழியர்கள், பல சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் சூத்திரதாரி என்று சந்தேகிக்கப்படும் ஒருவர் அடங்குவதாக வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
டிக்கெட் சோதனைகளை தவிர்ப்பதற்காக சுற்றுலா வழிகாட்டிகள் அருங்காட்சியக ஊழியர்களுக்கு பணம் கொடுத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் பிரான்ஸ் மற்றும் துபாயில் உள்ள ரியல் எஸ்டேட்டில் சில பணத்தை முதலீடு செய்ததாக நம்பப்படுகிறது. அதிகாரிகள் 957,000 யூரோக்களுக்கு மேல் ($1.13 மில்லியன்) பறிமுதல் செய்துள்ளனர். இதில் 67,000 யூரோக்கள் ($79,459) வெளிநாட்டு நாணயமும், வங்கிக் கணக்குகளில் இருந்து 486,000 யூரோக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
வெர்சாய்ஸ் (Versailles) அரண்மனையிலும் இதேபோன்ற டிக்கெட் மோசடி நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாகவும், கூடுதல் விவரங்களை வழங்கவில்லை என்றும் வழக்கறிஞர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.





