கனடாவில் ஏதிலி அந்தஸ்து மறுக்கப்பட்டு நாடு கடத்தப்படும் நிலையில் யாழ். தமிழர்
இலங்கையில் உள்நாட்டுப் போர் மற்றும் இடப்பெயர்வுகளைச் சந்தித்து, 16 ஆண்டுகளுக்கு முன்பு சரக்கு கப்பல் மூலம் கனடா சென்றடைந்த இலங்கையரான
குகதீஸ்வரன், தற்போது மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்தப்படும் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளதாக கனேடிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட குகதீஸ்வரன் துரைசிங்கம்,இலங்கையின் உள்நாட்டுப் போர்ச் சூழலில் தாயை இழந்து, சிறுவயதிலேயே கல்வியைக் கைவிட்டு பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
2009 ஆம் திகதி போர் முடிவுக்கு வந்த நிலையில், சந்தேகத்தின் பேரில் அச்சுறுத்தல்களை எதிர்கொண்ட அவர், 2010 ஆம் ஆண்டில் 492 தமிழ் ஏதிலிகளுடன் ‘MV Sun Sea’ சரக்குக் கப்பலில் ஆபத்தான கடல் பயணத்தை மேற்கொண்டு கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தை சென்றடைந்துள்ளார்.
எனினும், கனடாவில் அவருக்கு முறையான சட்ட உதவி கிடைக்காமை மற்றும் மொழிபெயர்ப்புச் சிக்கல்களால் அவரது ஏதிலி அந்தஸ்து கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் கடும் மனநலப் பாதிப்புக்கும் (Psychosis), வீடற்ற நிலைக்கும் தள்ளப்பட்டார்.
அப்போதைய கனேடிய அரசு மற்றும் ஊடகங்கள் அந்தக் கப்பலில் வந்தவர்களைத் தவறாகச் சித்தரித்தமையால், அவர் இலங்கைக்குத் திரும்பினால் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைச் சந்திக்க நேரிடும் என அவரது தற்போதைய சட்டத்தரணி வாதிடுகிறார்.
கடந்த காலங்களில் இவருக்கு வழங்கப்பட்ட சட்டப் பிரதிநிதித்துவம் பலவீனமாக இருந்ததே இந்த நிலைக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
தற்போது மவுண்ட் சினாய் மருத்துவமனையின் சிகிச்சை பெற்று வரும் குகதீஸ்வரன், சமூகத்தில் மனநலப் பாதிப்பு உள்ளவர்களுக்குத் தன்னார்வலராக உதவி வருகிறார்.
இந்நிலையில், எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதி அவரை நாடு கடத்தத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அதற்குத் தடை கோரி நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இவருக்கு முறையான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துவருகின்றன.





