விமான விபத்து குறித்து இத்தாலி ஊடகம் சர்ச்சை செய்தி: இந்தியா மறுப்பு!
அகமதாபாத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானமை தொடர்பில் இத்தாலி ஊடகமொன்று வெளியிட்ட செய்திக்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது.
“விசாரணை முடிவடையாத நிலையில், ஆதாரமற்ற தகவல்கள் பொதுமக்களிடையே தேவையற்ற அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தும்” என்று இந்திய விமான விபத்து புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேற்படி விமான விபத்து தொடர்பில் இத்தாலியின் கோரியர் டெல்லா செரா என்ற நாளிதழ் பரபரப்பு செய்தியை வெளியிட்டிருந்தது.
இந்த விபத்து ஒரு தொழில்நுட்பக் கோளாறால் ஏற்படவில்லை என்றும், விமானி ஒருவர் வேண்டுமென்றே எரிபொருள் சுவிட்சை அணைத்ததால் நேர்ந்தது என்றும் அச்செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
மேலும், அந்த விமானி மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தார் குறிப்பிடப்பட்டிருந்தது. இது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையிலேயே இந்தச் செய்தியை இந்திய விமான விபத்து புலனாய்வுப் பிரிவு அடியோடு நிராகரித்துள்ளது.
“ விசாரணை இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை எந்த இறுதி முடிவும் எட்டப்படவில்லை. இத்தாலி நாளிதழின் கூற்று முற்றிலும் தவறானது. அவை வெறும் ஊகங்கள் மட்டுமே” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.





