சிரஞ்சீவியின் பெயர், புகைப்படம், குரல் அனைத்துக்கும் அதிரடி தடை
நடிகர் சிரஞ்சீவியின் பெயரையோ, புகைப்படம், குரல் என எதையும் வர்த்தக ரீதியாகப் பயன்படுத்த இணையதள ஆடை விற்பனையகங்கள், டிஜிட்டல் ஊடக அமைப்புகள், யூடியூப் சேனல்கள் மற்றும் இதர அமைப்புகளுக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹைதராபாத் நகர நீதிமன்றத்தில், சிரஞ்சீவி தொடர்ந்த மனுவில், தன்னுடைய அடையாளம் மற்றும் புகழை, அதிகாரப்பூர்வமற்றவர்கள், வர்த்தக ரீதியாகப் பயன்படுத்துவதைத் தடை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, சிரஞ்சீவியின் புகைப்படம், பெயர், அவரது அடையாளம், குரல் உள்ளிட்டவற்றை எந்த அமைப்பும் நிறுவனமும் வர்த்தக ரீதியாகப் பயன்படுத்தக் கூடாது என்று இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.
இதுவரை, ரஜினிகாந்த், அமிதாப் பச்சான், அக்சய் குமார், ஹிருத்திக் ரோஷன், குமார் சானு, அர்ஜித் சிங், ஆஷா போன்ஸ்லே, ஐஸ்வர்யா பச்சான், அபிஷேக் பச்சான், கரன் ஜோஹர், அகினேனி நாகர்ஜுனா உள்ளிட்டோர் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.




