இலங்கை போர்க்குற்றவாளிகளுக்கு மேலும் தடை? ; உமா குமரன் கோரிக்கை
இலங்கை போர்க்குற்றவாளிகள் மீதான தடைகளை மேலும் விரிவுபடுத்துமாறு பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன், இங்கிலாந்து வெளியுறவுச் செயலாளரிடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.
டிசம்பர் 16-ஆம் திகதி நடைபெற்ற வெளியுறவுக் குழுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், போர் முடிந்து 15 ஆண்டுகள் ஆகியும், போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகள் தொடர்பில் எந்தவொரு முறையான விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக, சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறைகளில் ஈடுபட்டவர்களைத் தண்டிப்பதற்கான அரசியல் விருப்பம் இலங்கை அரசாங்கத்திடம் இல்லை என அவர் சாடினார்.
ஏற்கனவே ஷவேந்திர சில்வா மற்றும் கருணா அம்மான் உள்ளிட்ட நால்வர் மீது தடைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், இப்பட்டியலில் மேலும் பலரைச் சேர்க்குமாறு உமா குமரன் வலியுறுத்தினார்.
இதற்குப் பதிலளித்த வெளியுறவுச் செயலாளர் யெவெட் கூப்பர் (Yvette Cooper), தமிழ் மக்களின் நியாயமான கவலைகளை ஏற்றுக்கொள்வதாகவும், இலங்கையில் மனித உரிமைகளை உறுதிப்படுத்த நீடித்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.





