ஈரானிய வீராங்கனைகளுக்கு அடைக்கலம் கொடுத்த அவுஸ்திரேலியா!
தமது நாட்டில் நிலவும் சூழ்நிலைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தேசிய கீதத்தைப் பாட மறுத்த ஈரான் தேசிய பெண்கள் கால்பந்து அணியின் 05 வீராங்கனைகளுக்கு அவுஸ்திரேலியா மனிதாபிமான விசா வழங்கியுள்ளது.
தென் கொரியாவுக்கு எதிரான முதல் போட்டியின் போது, ஈரான் நாட்டின் தேசிய கீதத்தைப் பாடாமல் அந்நாட்டு வீராங்கனைகள் 05 பேர் மௌனம் காத்துள்ளனர்.
இது ஈரான் அரசு ஊடகங்களால் “மிகப்பெரிய அவமானம்” என்றும், அவர்கள் “யுத்த கால துரோகிகள்” எனவும் விமர்சிக்கப்பட்டுள்ளது.
இதனால் தமது நாட்டில் ஏற்படக்கூடிய அரசியல் அழுத்தங்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் காரணமாக இந்த வீராங்கனைகள் அரசியல் புகலிடம் கோரியிருந்தனர்.
அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் டோனி பர்க், ஈரான் பெண்கள் கால்பந்து அணியின் தலைவி உள்ளிட்ட ஐந்து வீராங்கனைகள் அவுஸ்திரேலியாவில் பாதுகாப்பாக இருக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியப் பிரதமர் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடலைத் தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.





