தென்கொரிய தொழிற்சாலையில் பாரிய தீ விபத்து
தென்கொரியாவின் Daejeon நகரில் அமைந்துள்ள வாகன உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 85 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தலைநகர் சியோலில் இருந்து சுமார் 160 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள குறித்த தொழிற்சாலையில் இன்று அதிகாலை திடீரெனத் தீ பரவியுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதுடன், இத்தீ விபத்தில் சிக்கி காயமடைந்த 50 பேர் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் மேலும் 35 பேரின் நிலைமை பாரதூரமானதாக உள்ளதாகவும், அவர்களுக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





