இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டம் ஒழிக்கப்படும் – பிரதமர் ஹரிணி

‘சுபீட்சமான நாடு மற்றும் அழகான வாழ்வு’ என்ற கருத்தினைப் பின்பற்றும் தேசிய மக்கள் சக்தியின் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) எதிர்காலத்தில் இல்லாதொழிக்கப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்டத்தின் முசலி தேர்தல் பிரிவுக்குட்பட்ட சிலாவத்துறை பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) நீக்குவது தொடர்பாக அமைச்சரவையினால் ஏற்கனவே குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கமைவாக எதிர்காலத்தில் சட்டத்தை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மக்கள் மதம் அல்லது இனத்தின் அடிப்படையிலான ஒடுக்குமுறைகளுக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள் என்றும், நெருக்கடிகளை அரசாங்கம் ஒருபோதும் இனவாத மனப்பான்மையுடன் பார்க்காது என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மேலும் வலியுறுத்தினார்.