இந்தியாவின் தலைநகரில் சுவாச பிரச்சினையை எதிர்கொள்ளும் மக்கள்!

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் (Delhi) தீபாவளி பண்டிகையை தொடர்ந்து காற்று மாசுப்பாடு அதிகரித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இதனால் மக்கள் சுவாச பிரச்சினையை எதிர்கொள்வதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் (CPCB) படி, டெல்லியில் ஒட்டுமொத்த காற்று தரக் குறியீடு (AQI) இன்று காலை 10 மணி நிலவரப்படி 359 என்ற அளவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய பவானாவில் (Bawana) காலை 10 மணி நிலவரப்படி AQI 432 ஆகவும், ஜஹாங்கிர்புரியில் (Jahangirpuri) 405 ஆகவும், அசோக் விஹாரில் (Ashok Vihar) 408 ஆகவும், வஜீர்பூரில் (Wazirpur) AQI 408 ஆகவும், காற்றின் தரம் ‘கடுமையான’ வகையின் கீழ் வருவதால், காற்றின் தரம் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளாக உள்ளன.
இது தொடர்பில் ANI ஊடகத்திடம் கருத்து வெளியிட்டுள்ள பிரதேசவாசி ஒருவர், மாசுபாடு இன்று மட்டும் அதிகரித்து வரவில்லை. பல ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. எல்லோரும் அரசியல்வாதிகளைக் குறை கூறுகிறார்கள். ஆனால் மக்களே இப்படித்தான் இருக்கிறார்கள். மக்கள் தங்களைத் தாங்களே மேம்படுத்திக் கொள்ளவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட மற்றுமொரு நபர் “இது அனைவரின் பொறுப்பு. ஒவ்வொரு தனிநபரும் பொறுப்பேற்றால், காற்றின் தரக் குறியீட்டு அளவைக் கட்டுப்படுத்த முடியும். அரசு மற்றும் நிறுவனங்களின் சிந்தனையால் மட்டும் எதுவும் நடக்காது.
ஒரு சமூகமாக, நாம் இந்தப் பொறுப்பை எடுத்துக்கொண்டு விஷயங்களைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். பசுமைப் பட்டாசுகளைப் பயன்படுத்த தெளிவான உத்தரவுகள் இருந்தன, மேலும் இந்த விதிகளை நாம் கடைப்பிடிக்க முடிந்தால், நாம் சமூகத்திற்கு ஒரு நல்ல சேவையைச் செய்வோம்” என்றார்.