யாழில் தங்க நகைகளைத் திருடிய பணிப்பெண் கைது
யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் பணிப்பெண்ணாக வேலை செய்த பெண், அந்த வீட்டில் நகைகளைத் திருடிய குற்றச்சாட்டில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ். நகர் பகுதியில் உள்ள வீடொன்றில் கணவன் – மனைவி இருவரும் வேலைக்குச் செல்பவர்கள் என்பதால், வீட்டு வேலைகளுக்காக 54 வயதுடைய பெண் ஒருவரைப் பணியில் அமர்த்தியுள்ளனர்.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் அந்த வீட்டில் இருந்த 14 பவுண் நகைகள் காணாமல் போயுள்ளன.

இது தொடர்பாக அந்தத் தம்பதியினர் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், குறித்த வீட்டின் பணிப்பெண்ணைக் கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, திருடப்பட்ட 14 பவுண் நகைகளும் மீட்கப்பட்டுள்ளன.
இதேவேளை, தான் இதற்கு முன்னர் பணியாற்றிய வீட்டிலும் நகைகளைத் திருடியுள்ளதாக அந்தப் பெண் விசாரணைகளின் போது ஒப்புக்கொண்டுள்ளார்.





