ஐரிஷ் ராப் இசைக் குழுவுக்கு தடை விதித்த கனடா
பிரபல ஐரிஷ் ராப் இசைக்குழுவான நீகேப், அரசியல் வன்முறை மற்றும் பயங்கரவாதத்தை ஆதரிப்பதாகக் கூறி கனடாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தடையை டொரண்டோ நாடாளுமன்ற உறுப்பினர் வின்ஸ் காஸ்பாரோ Xல் பதிவிட்டுள்ளார்.
“கனடாவிற்குள் நுழைய நீகேப் குழுவிற்கு தகுதி இல்லை என்று தீர்மானித்துள்ளோம். அரசியல் வன்முறையை ஆதரிப்பது, பயங்கரவாதத்தை ஊக்குவிப்பது, யூத விரோத கருத்துகள் மற்றும் வெறுப்புரைகளை எங்கள் அரசு நிராகரிக்கும்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
மூன்று உறுப்பினர்களைக் கொண்ட இந்த குழு அக்டோபரில் டொரண்டோ மற்றும் வான்கூவரில் கச்சேரிகளில் பங்கேற்க திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.
“இந்த குழு அரசியல் வன்முறையை வலுப்படுத்தி, ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளது,” என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.





