கோலி குறித்து அனுஷ்கா சர்மா உருக்கம்

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி நேற்று காலை அறிவித்தார்.
கோலியின் மனைவியும், நடிகையுமான அனுஷ்கா சர்மா அது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார் .
“எல்லோரும் உங்களின் சாதனைகள் மற்றும் மைல்கல்கள் குறித்துதான் பேசுவார்கள். ஆனால், யாரும் காணாத உங்களது போராட்டங்கள், வெளிக்காட்டாத உங்களது கண்ணீர், கிரிக்கெட் மீது நீங்கள் கொண்டுள்ள நேசத்தையும் நான் அறிவேன். அது என் நினைவில் உள்ளது. ஒவ்வொரு டெஸ்ட் தொடருக்கு பிறகும் நீங்கள் பக்குவமடைந்தீர்கள். சர்வதேச கிரிக்கெட்டில் நீங்கள் வெள்ளை சீருடையில்தான் ஓய்வு பெறுவீர்கள் என நான் கற்பனை செய்தது உண்டு. ஆனால், நீங்கள் எப்போதும் உங்கள் மனம் சொல்வதை செய்வீர்கள்” என அந்த பதிவில் அனுஷ்கா கூறியுள்ளார்.
2011 முதல் 2025 வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் சிங்க நடை போட்டவர் கோலி. சவாலான ஆடுகளம், சவாலான கள சூழல், சவால் தரும் சிறந்த பந்து வீச்சாளர்கள் என ஒவ்வொரு சவாலையும் கடந்து சாதித்தவர் கோலி. இந்திய அணியின் கேப்டனாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அணிக்கு புது பாய்ச்சலை கொடுத்தவர். 123 டெஸ்ட் போட்டிகளில் கோலி விளையாடி உள்ளார். மொத்தம் 210 இன்னிங்ஸில் ஆடி, 9230 ரன்கள் எடுத்துள்ளார். 30 சதங்கள் மற்றும் 31 அரை சதங்களை பதிவு செய்துள்ளார்.