ஈக்வாடோரில் ( Ecuador) எரிபொருள் விலை உயர்வு – வீதிக்கு இறங்கிய மக்கள்!

ஈக்வாடோரில் ( Ecuador) எரிபொருள் விலையை எதிர்த்து நேற்று மக்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளனர்.
தலைநகர் கியூட்டோவில் (Quito) ஒன்றுக்கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் சாலைகளை மறித்து, டயர்களை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மக்களின் இந்நடவடிக்கைக்கு எதிராக காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக்குண்டுகளைப் பிரயோகித்ததுடன், தடியடியும் நடத்தியுள்ளதாக ஏபிசி இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்போது ஊர்வலமாக சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் அந்நாட்டின் ஜனாதிபதியான டேனியல் நோபோவாவை (Daniel Noboa) எதிர்த்தும் குரல் எழுப்பியுள்ளனர்.
அந்நாட்டில் எரிபொருள் மானியம் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன், டீசல் விலையானது கேலனுக்கு $1.80 இலிருந்து $2.80 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பழங்குடியின அமைப்பு 21 நாட்களுக்கு முன்பு வேலைநிறுத்தங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது.
இதனைத் தொடர்ந்தே ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமாகியிருந்தன. ஆனால் தற்போது அவ் ஆர்ப்பாட்டங்கள் வன்முறையாக உருமாறியுள்ளது. இதில் நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எரிபொருள் விலை உயர்வு குறிப்பாக ஈக்வடாரின் ( Ecuador) முக்கியமான விவசாயம், மீன்பிடித்தல் மற்றும் போக்குவரத்துத் துறைகளில் பணிபுரியும் பழங்குடி மக்களை பாதிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.