அமெரிக்க-சீனத் தலைவர்கள் சந்திக்கக்கூடும் ; உதவியாளர்கள் கலந்துரையாடல்

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் சந்திப்பதற்கான சாத்தியம் பற்றி இரு தலைவர்களின் உதவியாளர்களும் கலந்துரையாடியுள்ளனர்.
இவ்வாண்டு பிற்பாதியில் ஆசியாவுக்குப் பயணம் செய்யும் டிரம்ப் ஸியைச் சந்திக்கக்கூடும் என திட்டம் பற்றி தகவல் அறிந்த வட்டாரம் குறிப்பிட்டது.சந்திப்புக்கான திட்டம் இன்னும் முடிவுசெய்யப்படவில்லை. எனினும், தென்கொரியாவில் நடைபெறவிருக்கும் ஆசிய பசிபிக் பொருளியல் ஒத்துழைப்பு உச்சநிலைக் கூட்டத்தில் அல்லது அக்டோபர் 30 முதல் நவம்பர் 1ஆம் திகதி வரை நடைபெறவிருக்கும் நிகழ்ச்சியில் இரு தலைவர்களும் சந்திக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவும் சீனாவும் ஒன்று மற்றதன்மீது பதில் வரிகள் விதிப்பதைத் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளதை அடுத்து அண்மை வாரங்களில் சீனாவுடன் உள்ள பதற்றத்தைத் தணிக்க டிரம்ப் முயற்சி செய்து வருகிறார்.
செப்டம்பர் 3ஆம் திகதி இரண்டாம் உலகப் போர் முடிந்து 80 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுகூரும் விழாவில் அமெரிக்கா உள்ளிட்ட அனைத்துலக நாடுகளின் விருந்தினரைச் சீனா அழைத்துள்ளதாக வாஷிங்டனில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்தது.
அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெஸ்ஸண்ட், நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை கூடிய விரைவில் நடைபெறும் என்று குறிப்பிட்டார்.“வர்த்தகம் நல்ல நிலையில் இருக்கிறது. இப்போது மற்ற விவகாரங்கள் பற்றி பேசலாம். சீனாவோ துரதிர்ஷ்டவசமாக தடை விதிக்கப்பட்ட ஈரானிய எண்ணெய்யையும் ரஷ்ய எண்ணெய்யையும் வாங்கும் ஆகப் பெரிய நாடாக இருக்கிறது,” என்று பெஸ்ஸண்ட் சொன்னார்.
உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்க டிரம்ப் அனைத்து வெளிநாட்டுப் பொருள்கள்மீதும் வரிகளை விதிக்க முற்பட்டார். ஆனால் அது பல பயனீட்டாளர் பொருள்களை அமெரிக்கர்கள் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழலுக்குத் தள்ளும் என்று நிபுணர்கள் எச்சரித்தனர்.
உலக நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பொருள்கள்மீது 10% அடிப்படை வரிகளை விதிக்க டிரம்ப் முடிவெடுத்துள்ளார். சீனா உள்ளிட்ட சில நாடுகளுக்கு மட்டும் கூடுதல் வரிகளை அவர் விதிப்பதாகச் சொன்னார்.
அமெரிக்காவும் சீனாவும் வர்த்தக உடன்பாட்டை ஆகஸ்ட் 12ஆம் திகதிக்குள் எட்டவேண்டும் என்று டிரம்ப் காலக்கெடு விதித்துள்ளார்.