போர் நிறுத்தத்தை ஏற்காவிடில் பொருளாதார தடை – ட்ரம்ப் எச்சரிக்கை

சவுதி அரேபியாவில் நடந்த அமெரிக்கா – உக்ரைன் பேச்சுவார்த்தையில் உக்ரைன் ஒப்புதல் அளித்துள்ள ஒரு மாத போர் நிறுத்தத்தை ஏற்றுக் கொள்ளாவிட்டால் ரஷ்யா குறிப்பிடத்தக்க பொருளாதார தடைகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் நேற்று முன்தினம் ஊடகவியலாளர்களைச் சந்தித்த ட்ரம்ப், ‘எங்களுடைய பிரதிநிதிகள் ரஷ்யாவுக்குச் செல்ல இருக்கின்றனர். ரஷ்யா போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ளும் என்று நான் நம்புகிறேன்.
ரஷ்யாவுக்கு பேரழிவினை ஏற்படுத்தும் அந்நாட்டுக்கு மோசமான விளைவுகளை உண்டாக்கும் காரியங்களை என்னால் செய்ய முடியும்.
அம்முடிவினை நான் விரும்பவில்லை. ஆனால் நான் அமைதியைக் காண விரும்புகிறேன்’ என்று தெரிவித்தார்.
சவுதி அரேபியாவில் அமெரிக்காவுடன் நடந்த பேச்சுவார்த்தையில் அந்நாடு முன்மொழிந்த 30 நாள் போர் நிறுத்தத்துக்கு உக்ரைன் ஒப்புக் கொண்டது.
ரஷ்யாவுடன் உடனடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபடவும் உக்ரைன் சம்மதம் தெரிவித்திருந்தது. இப்போர் நிறுத்த ஒப்பந்தம், நிலம், கடல் மற்றும் வான்வழித்தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
ஆனால் ரஷ்யா இதுகுறித்து இன்னும் உறுதியான நிலைப்பாட்டினை எடுக்கவில்லை. ஒரு முடிவினை எட்டுவதற்கு முன்பாக அமெரிக்காவிடமிருந்து கூடுதல் தகவலுக்காக காத்திருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
இதேவேளை, உக்ரைனுடன் போர்நிறுத்தத்துக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஒப்புக்கொள்வார் என்றாலும் அதற்கு முன்பாக தனது நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என்று விரும்புவார். அதனால் பேச்சுவார்த்தை இழுபறியாக வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.
இதேவேளை, காசா மற்றும் உக்ரைன் விவகாரங்களில் மத்தியஸ்தராக இருந்த ட்ரம்ப்பின் பிரதிநிதி ஸ்டீவ் விட்கோஃப் இவ்வாரம் ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா செல்வார் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.