நிழல் வங்கிகளால் பிரித்தானியாவிற்கு நிதியியல் ஆபத்து : பிரபுக்கள் சபை எச்சரிக்கை
பிரித்தானியாவில் கட்டுப்பாடற்ற முறையில் வளர்ந்து வரும் ‘நிழல் வங்கி’ (Shadow Banking) துறையால் நாட்டின் நிதி ஸ்திரத்தன்மைக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பிரபுக்கள் சபை (House of Lords) எச்சரித்துள்ளது.
சுமார் 16 டிரில்லியன் டொலர் மதிப்பிலான இந்த நிழல் வங்கித் துறையானது, பாரம்பரிய வங்கிகளுக்கு அப்பால் இயங்கும் தனியார் கடன் நிறுவனங்கள் மற்றும் முதலீட்டு அமைப்புகளை உள்ளடக்கியது.
இந்த நிறுவனங்களின் அபரிமிதமான வளர்ச்சி, 2008-ஆம் ஆண்டு ஏற்பட்ட உலக நிதி நெருக்கடியைப் போன்றதொரு மோசமான சூழலை மீண்டும் உருவாக்கக்கூடும் என பிரபுக்கள் சபையின் நிதி ஒழுங்குமுறை குழு சுட்டிக்காட்டியுள்ளது.
குறிப்பாக, அமெரிக்காவின் பொருளாதாரத் தாக்கங்களால் பிரித்தானியா முதலில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ள இக்குழு, நிதியமைச்சு இந்த அபாயங்களைக் கையாள்வதில் போதிய அக்கறை காட்டவில்லை என குற்றம் சாட்டியுள்ளது.
இருப்பினும், நிதி ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்க தங்களிடம் வலுவான கட்டமைப்பு உள்ளதாக நிதியமைச்சு இக்குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.





