படுதோல்வியடைந்த தக் லைஃப்… முதல் முறையாக மனம் திறந்த மணிரத்னம்

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வி அடைந்துள்ள திரைப்படம் தான் ‘தக் லைஃப்’. இந்த படம் ஒட்டுமொத்தமாக இந்தியாவில் ரூ.50 கோடி வசூலை கூட தாண்டவில்லை என்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரூ.300 கோடி பட்ஜெட்டில் பல முன்னணி நடிகர்களுடன் தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படம் சூரியின் ‘மாமன்’ திரைப்படம், அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவந்த் இயக்கிய ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ போன்ற சிறிய பட்ஜெட் படங்களின் வசூலைக் கூட தாண்ட முடியாமல் திண்டாடி வருகிறது.
படம் குறித்து இதில் நடித்த நடிகர்களோ அல்லது பிற கலைஞர்களோ எதுவுமே பேச முடியாமல் அமைதி காத்து வருகின்றனர். படம் தோல்வி அடைந்ததற்கான காரணங்கள் குறித்து இணையதளத்தில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன.
ஒரு படம் மிகப்பெரிய வெற்றி பெறுவதற்கு இயக்குனருடன் உதவி இயக்குனர்களின் பங்கும் இருக்க வேண்டும். திரைக்கதையில் தொய்வு ஏற்பட்டால் அந்த இடங்களை சுட்டிக்காட்டி உதவி இயக்குனர்கள் இயக்குனருக்கு உதவிகரமாக இருந்திருக்க வேண்டும்.
ஆனால் இவர்கள் மணிரத்னம் சொன்ன விஷயங்களை மட்டுமே கேட்டு செயல்பட்டதாகவும், இயக்குனருக்கு எடுத்துச் சொல்லும் அளவிற்கு யாருமே இல்லாத நிலையில் இந்த திரைப்படம் திரைக்கதையில் சொதப்பியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த நிலையில் படத்தின் தோல்வி குறித்து முதல்முறையாக மணிரத்னம் பேசியுள்ளார். தெலுங்கு ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், “தக் லைஃப்’ படத்தின் மீது ரசிகர்கள் எதிர்பார்ப்பை அதிகமாக வைத்திருந்தனர். 38 ஆண்டுகளுக்குப் பின் ‘நாயகன்’ படத்திற்குப் பிறகு இருவரும் இணைந்து இருந்ததால் ரசிகர்கள் இந்த எதிர்பார்ப்பை வைத்திருந்தனர். ஆனால் ‘நாயகன்’ போன்றே ஒரு படத்தை கொடுக்க நாங்கள் விரும்பவில்லை.
வேறு மாதிரியான சோதனையை மேற்கொண்டோம். ஆனால் ரசிகர்கள் ‘நாயகன்’ போன்ற படத்தையே எதிர்பார்த்தனர். இதுவே அவர்கள் ஏமாறுவதற்கான காரணம். அதற்காக நாங்கள் இருவருமே மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” என கமலுக்கும் சேர்த்து மணிரத்னம் மன்னிப்பு கோரியுள்ளார்.