வடகொரியாவில் கடுமையாகும் மரண தண்டனை – பணம் படைத்தவர்களுக்கு மட்டும் விலக்கு?
நெட்ஃபிளிக்ஸின் ஸ்க்விட் கேம் (Squid Game) உள்ளிட்ட தென் கொரிய நாடகங்களைப் பார்ப்பதற்கும், கே-பாப் ( K-Pop) இசையைக் கேட்பதற்கும் வடகொரியா தடை விதித்துள்ளது.
அரசின் தடையை மீறி இதனை பார்க்கும் மாணவர்களுக்கு மரண தண்டனை விதித்து வருவதாக அம்னஸ்டி இன்டர்நேஷனலுடன் ( Amnesty International) பகிரப்பட்ட புதிய சாட்சியங்கள் தெரிவிக்கின்றன.
வடகொரியாவில் இருந்து தப்பி ஓடிவந்து வெளிநாடுகளில் தஞ்சம் கோரியுள்ள சுமார் 25 பேரிடம் பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில் இந்த தகவல் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது.
வடகொரியாவில் பிற நாடுகளின் கலாச்சாரங்களை தழுவுவதற்கு அல்லது பார்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சட்டத்தை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக மரண தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன.
குறிப்பாக 16, 17 வயதுடைய சிறுவர்கள் மரண தண்டனைக்கு உட்படுத்தப்படுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு தண்டனைகளை தவிர்க்க பணக்கார குடும்பங்கள் அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுப்பதாகவும், அம்னஸ்டியின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
அதே நேரத்தில் பணம் அல்லது தொடர்புகள் இல்லாதவர்கள் மிகவும் கடுமையான விளைவுகளை எதிர்கொள்வதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





