இலங்கை செய்தி

” உண்மை வெளிவரும் நாளே எமக்கு சுதந்திரம்” வவுனியாவில் போராட்டம்!

இலங்கையின் சுதந்திர தினமான இன்று , காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வடக்கில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்றைய நாளை, காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளின் தாய்மார்கள் கரிநாள் என நினைவு கூருகின்றோம் என  தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர் கூறினர்.

வவுனியாவில் இன்று அவர்களது போராட்டப் பந்தலில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே சங்கப் பிரதிநிதிகள் மேற்கண்டவாறு கூறினர்.

“ இலங்கைக்கு சுதந்திரம் எங்களுக்கு விடுதலையாக அமையவில்லை. அது எங்கள் குழந்தைகள் காணாமல் ஆக்கும் ஒரு நீண்ட, இருண்ட பாதையின் தொடக்கமாக மாறியது.

நாங்கள் அரசியல்வாதிகள் அல்லர். நாங்கள் சட்ட நிபுணர்கள் அல்லர். நாங்கள் தாய்மார்கள். எங்கள் குழந்தைகளைப் பெற்றவர்கள்.

அவர்களை வளர்த்தவர்கள். அவர்களை இழந்தவர்கள். வவுனியா நகரில், இந்த வன்னிப் பந்தலில் 3 ஆயிரத்து 271 நாட்களாக நாங்கள் அமர்ந்திருக்கின்றோம்.

மழையிலும், வெயிலிலும், அரசுகள் மாறினாலும், வாக்குறுதிகள் மாறினாலும், எங்கள் கேள்வி மட்டும் மாறவில்லை. 1948 இல், இலங்கை சுதந்திரம் பெற்றது.

ஆனால் அந்தச் சுதந்திரம் எங்கள் உரிமைகளைப் பாதுகாக்கவில்லை. எங்கள் மொழியை மதிக்கவில்லை. எங்கள் நிலங்களைக்  காக்கவில்லை. எங்கள் குழந்தைகளை எங்களிடம் திருப்பித் தரவில்லை.

இந்த அநீதியின் வேர்கள், சோல்பரி கமிஷன் உருவாக்கிய அரசியல் அமைப்பிலேயே உள்ளன.

இங்கிலாந்து இலங்கையிலிருந்து அவசரமாக வெளியேறி, பெரும்பான்மை ஆட்சியை ஜனநாயகமாக்கி, தமிழர்களை பாதுகாப்பு அற்றவர்களாக விட்டுச் சென்றது.

காலனித்துவத்திற்கு முன்பு, தமிழர்களுக்கு தங்கள் சொந்த அரசியல் அதிகாரம் இருந்தது. தங்கள் சொந்த நிலமும் நிர்வாகமும் இருந்தது. இந்த உண்மை அரசமைப்பில் சொல்லப்படவில்லை. இது சொல்லப்படாத உண்மை.

பின்னர் எங்கள் குழந்தைகள் காணாமல் ஆக்கப்படுவதற்கு ஒரு சட்டபூர்வ அநீதியாக மாறியது. அந்தத் தவறுகளின் விலையையே இன்று நாங்கள் இந்தப் பந்தலில் எங்கள் கண்ணீரோடு செலுத்துகின்றோம்.

எங்கள் குழந்தைகள் எங்கே? அவர்கள் எங்கே? யார் பொறுப்பு? எப்போது நீதி? கரி நாள் எங்களுக்கு ஒரு சடங்கு நாள் அல்ல. அது ஒரு நினைவூட்டல்.

சுதந்திரம் எங்களுக்கு கிடைக்கும் நாள்,  எங்கள் குழந்தைகளின் உண்மை வெளிவரும் நாளே. இது சுதந்திர தினம் அல்ல.

இது எங்கள் குழந்தைகள் காணாமல் ஆக்கப்பட்ட கரிநாள்.” – எனவும் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர் குறிப்பிட்டனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!