நல்ல ஒரு தொடக்கத்தை அமைத்த பேச்சுவார்த்தை – நம்பிக்கையில் ஈரான்!
ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே இன்று ஓமானில் நடைபெற்ற உயர்மட்ட அணுசக்தி பேச்சுவார்த்தைகள் ஒரு நல்ல தொடக்கத்தை குறிப்பதாகவும், எதிர்காலத்தில் மேலும் பேச்சுவார்த்தைகள் தொடரும் என்றும் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி ( Abbas Araqchi) கூறினார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், “இது பேச்சுவார்த்தைகளுக்கு ஒரு நல்ல தொடக்கமாகும். பேச்சுவார்த்தைகளைத் தொடர்வது குறித்து ஒரு புரிதல் உள்ளது. எவ்வாறு தொடர வேண்டும் என்பது குறித்த ஒருங்கிணைப்பு தலைநகரங்களில் முடிவு செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
அணுசக்தி செறிவூட்டல் மற்றும் ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ (Marco Rubio) முன்னதாக அறிவித்திருந்தார்.
இதற்கிடையில் ஈரானும் ஏவுகணைகள் பற்றி விவாதிக்க மாட்டோம் என்றும், யுரேனியத்தை வளப்படுத்தும் அதன் உரிமையை தெஹ்ரான் அங்கீகரிக்க விரும்புகிறது என்றும் கூறியிருந்தது.
இவ்வாறாக இரு நாடுகளும் முரண்பட்ட கருத்துக்களை கொண்டுள்ள நிலையில் தற்போதைய பேச்சுவார்த்தைகள் வந்துள்ளன.





