இலங்கை – சர்வதேச வெசாக் தினத்தில் பங்கேற்க வியட்நாம் செல்லும் ஜனாதிபதி!

சர்வதேச வெசாக் தினத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் மே மாதம் 5 ஆம் திகதி திங்கட்கிழமை வியட்நாம் செல்கின்றார்.
‘உலக அமைதி மற்றும் நிலையான வளர்ச்சிக்கான பௌத்த நுண்ணறிவு’ என்ற தொணிப்பொருளில் 2025 சர்வதேச வெசாக் தினம் இம்முறை கொண்டாடப்படுகின்றது. சுமார் 80 நாடுகளின் பிரதிநிதிகள் சர்வதேச வெசாக் தினத்தில் பங்கேற்க உள்ளனர்.
ஹோ சி மின் நகரில் அமைந்துள்ள வியட்நாம் பௌத்த நிலையத்தில் நடைபெறவுள்ள சர்வதேச வெசாக் தினம் மற்றும் சர்வதேச அறிவியல் மாநாட்டில் சுமார் 1,000 சர்வதேச பிரதிநிதிகள் உட்பட 2,000 பேர் வரை பங்கேற்க உள்ளனர்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சில நாடுகளின் தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்.
2017 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் அனுசரணையுடனான சர்வதேச வெசாக் வைபவம் இலங்கையில் இடம்பெற்றபோது இந்திய பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்றிருந்தார்.
இவ்வாறானதொரு நிலையில் 2025 ஆம் ஆண்டு சர்வதேச வெசாக் தினத்தை மே மாதம் 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் வியட்நாமில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் சிறப்பு விருந்தினராக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கலந்துக்கொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது.