சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையில் கூர்மையான சரிவு – குடியேற்ற திட்டத்தில் பாரிய முன்னேற்றம்!
பிரித்தானியாவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக பிரித்தானிய உயர்கல்வி புள்ளிவிவர நிறுவனத்தின் (HESA) புதிய தரவு காட்டுகிறது.
வெளிநாடுகளில் வழங்கப்படும் பிரித்தானிய கல்வித் திட்டங்களில் சேருபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதே இதற்கான காரணம் எனக் கூறப்படுகிறது.
HESA-வின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, 2024/25 ஆம் ஆண்டில் பிரித்தானியா 685,565 சர்வதேச மாணவர்களை வரவேற்றது, இது 2023/24 உடன் ஒப்பிடும்போது 6 சதவீதம் சரிந்துள்ளது.
சர்வதேச மாணவர் வரியை அறிமுகப்படுத்துவதற்கு பல்கலைக்கழகங்கள் தயாராகி வருவதால் மாணவர் விசாக்களில் சரிவு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்படி ஆகஸ்ட் 2028 முதல் பல்கலைக்கழகங்கள் சர்வதேச மாணவருக்கு ஆண்டுக்கு £925 நிலையான கட்டணத்தை வசூலிக்கும். இந்த வரியின் கீழ், ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு ஆண்டும் அதன் முதல் 220 மாணவர்களுக்கு மட்டுமே உதவித்தொகையை பெறும்.
இதற்கிடையே புதிய புள்ளிவிபரங்களின்படி, இங்கிலாந்தில் முதுகலை படிப்பைத் தொடரும் இலங்கை மாணவர்கள் ஆண்டுக்கு ஆண்டு குறிப்பிடத்தக்க சரிவைக் கண்டுள்ளனர். 2024/25 ஆம் ஆண்டில் சர்வதேச முதுகலை சேர்க்கை ஒட்டுமொத்தமாக 10 சதவீதம் குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கு முக்கியமான காரணம் சார்பு விசாவில் கொண்டுவரப்பட்ட கட்டுப்பாடுகள் தான். இதன்காரணமாக தற்போது மாணவர்கள் கனடா, ஆஸ்திரேலியா மற்றும் ஸ்காண்டிநேவிய நாடுகள் போன்ற மாற்று இடங்களைத் தேர்ந்தெடுப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.





