அமெரிக்க முதலீடுகளை பெறுவது குறித்து ஆராய்வு!
இரு நாடுகளுக்கும் இடையிலான தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞான உறவுகளை மேம்படுத்துவதற்கு ஆதரவு வழங்கப்படும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் உறுதியளித்துள்ளார்.
விஞ்ஞானம், தொழில்நுட்பம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் பேராசிரியர் கோமிக உடுகமசூரியவிடமே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் மேற்படி சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தவுள்ள ‘தேசிய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக் கொள்கை’ தொடர்பிலும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகளில் இரு நாடுகளும் கூட்டாக செயல்படுத்தக்கூடிய வேலைத்திட்டங்கள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், இலங்கைக்கு அமெரிக்க முதலீட்டை ஈர்ப்பதற்கு எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
‘தேசிய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக் கொள்கை’யின் கீழ், உயர்கல்வி, தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் டிஜிட்டல் மயமாக்கல போன்ற நவீன துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் ஆராயப்பட்டன.
இலங்கையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி செயல்முறையை வலுப்படுத்துவதன் மூலம் அமெரிக்க சந்தைக்கு பிரவேசிப்பதற்கான புதிய வாய்ப்புகள் உருவாகும் என அமெரிக்க தூதுவர் ஜுலி சங் தெரிவித்தார்.





