பதவி விலக தயார்: ரணில் அறிவிப்பு! ஐதேக தலைமைப் பதவியை ஏற்பாரா சஜித்?
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து விலகுவதற்கு தான் தயார் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன ஒன்றிணைவதற்கு தான் தான் தடையென கருதப்படுமானால் இந்த முடிவை எடுக்க தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்தின்போதே ரணில் இவ்வாறு தெரிவித்தாரென சிங்கள நாளிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேற்படி இரு கட்சிகளையும் ஒன்றிணைப்பதற்குரிய பேச்சுகள் தொடர்ந்து இடம்பெற்றுவருகின்றன. எனினும், இறுதி முடிவு எட்டப்படவில்லை.
இந்நிலையில் இரு கட்சிகளும் இணைவதையே தான் விரும்புவதாக செயற்குழு கூட்டத்தில் ரணில் தெரிவித்துள்ளார்.
“ ஐதேக தலைமைப்பதவியில் இருந்து நான் விலக வேண்டும் என செயல்குழு கருதினால், தீர்மானம் நிறைவேற்றினால் அந்த முடிவை ஏற்பதற்கு நான் தயார்.
சஜித் பிரேமதாசவோ அல்லது தகுதி உடைய ஒருவருக்கு தலைமைப் பதவியை வழங்குவதற்கு நான் எதிர்ப்பை வெளியிடப்போவதில்லை.” என ரணில் குறிப்பிட்டார் எனவும் மேற்படி செய்தியில் கூறப்பட்டுள்ளது.





