கெனிஷா என் வாழ்க்கையின் அழகான துணை; உறவை உறுதிப்படுத்திய ரவி

நடிகர் ரவி மோகன், கெனிஷா உடனான உறவு பற்றியும், ஆர்த்தி வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நடிகர் ரவி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது :
“இத்தனை ஆண்டுகளாக முதுகில் குத்தப்பட்டேன். தற்போது நெஞ்சில் குத்தப்பட்டுள்ளேன். கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியால் எனது வாழ்க்கையை உருவாக்கி உள்ளேன்.
கடந்த கால திருமண வாழ்க்கையை வைத்து மலிவான அனுதாபம் தேடுவதை என்னால் அனுமதிக்க முடியாது. மனைவியால் மனதளவிலும், உடல் அளவிலும், உணர்வு ரீதியாகவும் கடந்த காலங்களில் துன்புறுத்தப்பட்டேன்.
பொன் முட்டையிடும் வாத்தாகவே என்னை பயன்படுத்தினார் ஆர்த்தி.
நான் மனைவியை மட்டுமே பிரிய முடிவு செய்துள்ளேன். மகன்களை அல்ல. என் மகன்களை பயன்படுத்தி பணரீதியாக ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்.
ஆர்த்தி உடன் என் திருமண வாழ்க்கையை தொடர எவ்வளவோ முயற்சி செய்தேன். அவர் பொன் முட்டையிடும் வாத்தாகவே என்னை பயன்படுத்தினார். என்னை ஒரு கணவராக அவர் மதிக்கவே இல்லை. எனது மகன்கள் இருவரையும் பார்க்கவிடாமல் என்னை தடுத்து வருகின்றனர். 5 ஆண்டுகளாக எனது வருமானம் அனைத்தையும் ஆர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் தான் அனுபவித்து வந்தனர்.
இத்தனை நாட்கள் பொறுமையாக இருந்தேன். எனது பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. எனது காயங்களை உணராமல் எனது கண்ணியத்தை கேள்விக்குறியாக்குவதால் நான் பேச வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது நான் எடுத்துள்ள முடிவால் முன்பு இல்லாத அளவு மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனது குழந்தைகள் எனது பெருமை, மகிழ்ச்சி, அவர்களுக்காக அனைத்தையும் செய்வேன். சில நாட்களாக எனக்கிருந்த வருத்தம் 16 ஆண்டுகால துயரமான வாழ்க்கையைவிட பெரிதல்ல.
என் வாழ்வில் ஒளியை கொண்டு வந்தவர் கெனிஷா. என்னுடைய வீட்டை விட்டு எதுவுமில்லாமல் நான் வெளியேறியபோது எனக்கு துணையாக நின்றவர் கெனிஷா. அவர் என் வாழ்க்கையின் அழகான துணை.
வாழ்க்கையில் நான் சந்தித்த சட்ட ரீதியான, உணர்வு ரீதியான, நிதி ரீதியான எல்லா பிரச்சனைகளிலும் என்னுடன் துணை நின்றார். என் வாழ்வில் ஒளியை கொண்டு வந்தவர் கெனிஷா. என்னுடைய கதையை கேட்ட அடுத்த நிமிடத்தில் இருந்து ஒரு மனநல ஆலோசகராக மட்டும் இல்லாமல் தோழியாகவும் இருந்து எனக்கு உதவினார்” என ரவி மோகன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.