என் நேர்மை மக்களுக்கு புரியும்: ரஹ்மான் விளக்கம்!
“ சில நேரங்களில் நோக்கங்கள் தவறாக புரிந்து கொள்ளப்படுகின்றன. யாரையும் காயப்படுத்த வேண்டும் என நான் விரும்பவில்லை.” – என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
தனது பேட்டி சர்ச்சையானது விவகாரம் தொடர்பிலேயே ரஹ்மான் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில்,
“ பாலிவுட் சினிமா துறை மத வாதம் சார்புள்ளதாக மாறிவிட்டது.
கடந்த 8 ஆண்டுகளில் அதிகார கட்டமைப்பில் ஏற்பட்ட மாற்றம் இதற்கு காரணமாக இருக்கலாம்.
படைப்பாற்றல் இல்லாதவர்களிடம் முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளது. இதனால் எனக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பு குறைந்தது. வேலையைத் தேடி நான் செல்வதில்லை.
வேலை என்னைத் தேடி வரவேண்டுமென விரும்புகிறேன். எனது நேர்மையான பணியால், எனக்கு பலன் கிடைக்க வேண்டுமென்று விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்தப் பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தியது. இவரது கருத்துக்கு திரை துறையைச் சேர்ந்த பலர் எதிரான கருத்துக்களை தெரிவித்தனர். மேலும் சிலர் ஆதரவாகவும் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இதற்கு சமூக ஊடகத்தில் வெளியிட்ட வீடியோவில் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியதாவது,
“ இசை எப்போதும் இந்திய பண்பாட்டுடன் இணைவதற்கும், அதை கொண்டாடுவதற்கும், மதிப்பதற்குமான ஒரு வழியாகவே எனக்கு இருந்து வருகிறது.
இந்தியா தான் எனது ஊக்கம், என் ஆசான், என் வீடு. சில நேரங்களில் நோக்கங்கள் தவறாகப் புரிந்துகொள்ளப் படுகின்றன.
ஆனால், இசையின் மூலம் முன்னேறுவது, மரியாதை செலுத்துவதும் சேவை செய்வதுமே எப்போதும் என் நோக்கமாக இருந்து வந்துள்ளது.
யாரையும் புண்படுத்த வேண்டும் என நான் ஒருபோதும் நினைத்ததில்லை. என் நேர்மையை மக்கள் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
நான் இந்தியனாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன். இதுதான் கருத்து சுதந்திரத்தை அனுமதிக்கிறது. பல்வேறு பண்பாடுகளின் குரல்களை கொண்டாட வைக்கிறது. ஜெய் ஹிந்த், ஜெய் ஹோ.” எனவும் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.





