இந்திய கிரிக்கெட் வீரர்களை ‘தீவிரவாதி’என அழைத்த பாகிஸ்தான் ஆளுநர்; சிரித்த மோஷின் நக்வி(Mohsin Naqvi)
2025 ஆசியக் கோப்பையில் ஏற்பட்ட தோல்வியின் வெறியை அடக்க முடியாமல், இந்திய கிரிக்கெட் வீரர்களை ‘தீவிரவாதிகள்’ என்று பாகிஸ்தானின் சிந்து மாகாண ஆளுநர் காம்ரான் டெஸ்ஸோரி (Kamran Tessori) இழிவாகப் பேசியிருப்பது உலக அரங்கில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணிக்கு ஆசியக் கோப்பையை வழங்க மறுத்து, கோப்பையைத் தூக்கிக்கொண்டு சென்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோஷின் நக்வியைப்(Mohsin Naqvi) பாராட்டி ஆளுநர் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் காட்டுத் தீயாகப் பரவி வருகிறது.
அதில் “இந்திய அணி கோப்பையைப் பெற வரவில்லை… நமது சேர்மன், நாட்டின் உள்துறை அமைச்சரும் கூட என்பது அவர்களுக்குத் தெரியாது. பின்னர் அவர் இந்திய அணியை தீவிரவாதிகளைக் கையாள்வது போல கையாண்டார். அவர் கோப்பையை காரில் வைத்து எடுத்துச் சென்றுவிட்டார். இப்போது ஒட்டுமொத்த இந்தியாவும் கோப்பைக்குப் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறது.” என்று ஆளுநர் காம்ரான் டெஸ்ஸோரி தெரிவித்தார்.
இந்திய கிரிக்கெட் வீரர்களை ‘தீவிரவாதி’ என்று ஆளுநர் அழைத்தபோது, அருகில் அமர்ந்திருந்த மோஷின் நக்வி அதை மறுக்காமல், சிரித்து மகிழ்ந்த காட்சி இந்த விவகாரத்தின் மீதான கோபத்தை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது.
ஆசியக் கோப்பை இறுதிப் போட்டி உட்பட மூன்று முறை பாகிஸ்தானைத் தோற்கடித்து இந்திய அணி கோப்பையை வென்றது. ஆனால், பரிசளிப்பு விழாவில் கோப்பையை வழங்க மேடையில் நின்ற மோஷின் நக்வியிடம் இருந்து கோப்பையைப் பெற இந்திய வீரர்கள் மறுத்தனர். இதனால், வெட்கக்கேடான முறையில் நக்வி கோப்பையைத் தன்னுடன் காரில் எடுத்துச் சென்றார். இதற்குப் பதிலடியாக, கோப்பை இல்லாத மேடையில் இந்திய வீரர்கள் காற்றில் கோப்பையைத் தூக்கிக் கொண்டாடிய வீடியோ வைரலானது.
https://www.instagram.com/reel/DQE6v-HjH_U/?utm_source=ig_web_copy_link





