மலைப்பாம்பை கழுத்தில் சுற்றி இளம் பெண் நடனம்: கைது செய்யுமாறு உத்தரவு
கொழும்பில் நடைபெற்ற “ரோயல் அவுருது குமரி” தெரிவு விழாவின் போது, மலைப்பாம்பு ஒன்றினை கழுத்தில் சுற்றிக்கொண்டு நடனமாடிய பெண் ஒருவரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்திற்கு கொழும்பு மேலதிக நீதவான் எச்.டி.டி.ஜே. பிரேமரத்ன நேற்று (23) உத்தரவிட்டுள்ளார்.
சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்தச் சம்பவம் தொடர்பான காணொளிகளின் அடிப்படையில் வனவிலங்கு அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கொழும்பில் உள்ள ‘ரோயல் மார்க்ஸ் அரினா’ (Royal Marks Arena) வளாகத்தில் ஆடை அலங்காரக் கலைஞர் சந்திமால் ஜயசிங்கவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில், ‘மெத்மி ஹிரண்யா’ என்ற பெண் ஊர்வன வகையைச் சேர்ந்த மலைப்பாம்பை தனது கழுத்தில் சுற்றியவாறு, அதனை துன்புறுத்தும் வகையில் நடனமாடியதாக வனவிலங்கு திணைக்கள விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் அளிக்குமாறு சந்தேக நபருக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், அவர் அதனைச் செய்யத் தவறியதுடன் தற்போது தலைமறைவாக உள்ளதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
அதன்படி, அவரைக் கைது செய்வதற்கு பிடியாணை பிறப்பிக்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மேலும், இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த ஆடை அலங்காரக் கலைஞர் சந்திமால் ஜயசிங்க மற்றும் இந்த சம்பவத்தை காணொளி எடுத்த ஒளிப்பதிவாளர் ஆகியோரிடமிருந்து வாக்கு மூலங்களைப் பெறுவதற்கு அனுமதி வழங்குமாறும் வனவிலங்கு அதிகாரிகள் நீதிமன்றத்திடம் கோரியுள்ளனர்.
இதற்கமைய, குறித்த இருவரும் வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்கள விசாரணை அதிகாரிகளிடம் சென்று வாக்குமூலம் அளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.





