வடக்கு முதல்வர் விவகாரம் – ஸ்ரீதரன், சுமந்திரனை இணைக்க தீவிர சமரச முயற்சி!
அரசியல் ரீதியில் பிளவுபட்டிருக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இரு பெரும் தூண்களான ஸ்ரீதரனையும், சுமந்திரனையும் சமரசப்படுத்துவதற்குரிய முயற்சியில் அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மாகாணசபைத் தேர்தலில் தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் தமிழரசுக் கட்சி வெற்றிநடை போட வேண்டுமெனில் இரு தரப்பினரும் அரசியல் முரண்பாடுகளை களைந்து, ஓரணியில் திரள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் பட்சத்தில் வடக்கு முதல்வர் வேட்பாளராக சிறிதரனை களமிறக்குவதற்கு தமிழரசுக் கட்சி பரிசீலித்துவருகின்றது.
இதற்காக எம்.பி. பதவியை அவர் துறந்த பின்னர் யாழ்.மாவட்டத்தில் அடுத்த இடத்தில் இருக்கும் எம்.ஏ. சுமந்திரன் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றம் செல்வார்.
இத்திட்டத்துக்கு சுமந்திரன் தரப்பு பச்சைக்கொடி காட்டியுள்ளபோதிலும், ஸ்ரீதரன் தரப்பு நிபந்தனையொன்றை விதித்துள்ளது என அறியமுடிகின்றது.
இத்திட்டம் அமுலாக வேண்டுமெனில் தமிழரசுக் கட்சியின் தலைவராக தன்னை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் எனவும், தலைமைப்பதவி தொடர்பில் நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள் மீளப்பெறப்படவேண்டும் எனவும் சுமந்திரன் தரப்புக்கு, ஸ்ரீதரன் தரப்பு நிபந்தனை முன்வைத்துள்ளது.
அதேவேளை, சுமந்திரன் முதல்வர் வேட்பாளராக களமிறங்கினால்கூட ஸ்ரீதரனின் பகிரங்க ஆதரவு இல்லாமல் அவரால் வெற்றிபெறுவதற்குரிய சாத்தியமில்லை எனவும் கூறப்படுகின்றது. எனவே, முதல்வர் வேட்பாளராக களமிறங்குவதாக இருந்தால்கூட ஸ்ரீதரன் தரப்பின் நிபந்தனையை, சுமந்திரன் அணி ஏற்கவேண்டும் எனக் கூறப்படுகின்றது.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே இரு தரப்பினரையும் சமரசப்படுத்தி முடிவொன்றை எடுக்க வைப்பதற்குரிய முயற்சியில் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.





