இலங்கை முழுவதும் வேட்டை சிக்கிய ஒரு இலட்சம் பேர்
‘முழு நாடுமே ஒன்றாக ‘ தேசிய நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது முதல் நேற்று வரையான காலப்பகுதியில் மாத்திரம் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவ்வாறு கைது செய்யப்பட்ட ஒரு இலட்சத்து 14 ஆயிரம் சந்தேகநபர்களில், 2 ஆயிரத்து 367 பேருக்கு எதிராக தடுப்பு காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, குறிப்பிட்ட காலத்திற்குள் ஆயிரத்து 71 கிலோ 338 கிராம் ஹெரோயின், ஆயிரத்து 938 கிலோ 299 கிராம் ஐஸ், 4 ஆயிரத்து 917 கிலோ 387 கிராம் கஞ்சா மற்றும் 99 ஆயிரத்து 454 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் சுமார் 656 கிலோ ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் சட்டவிரோத சொத்து குவிப்பு தொடர்பாக 215 பேரிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை இவ்வாண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் இன்று வரை 24 இலட்சம் பேரிடம் நடத்தப்பட்ட சோதனைகளில், பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய ஆயிரத்து 479 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், 2024 முதல் 2026ஆம் ஆண்டுகளில் திட்டமிடப்பட்ட குற்றங்களில் ஈடுபட்ட 29 பேர் சர்வதேச நாடு கடத்தல் சட்டத்தின் கீழ் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதுடன், 89 குற்றவாளிகளுக்கு எதிராக ‘சிவப்பு எச்சரிக்கை’ விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 2024 இல் ஆயிரத்து 597 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களும் 2025 இல் ஆயிரத்து 546 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்கம், பணம், வாகனங்கள் மற்றும் காணிகளும் 2026 இல் இதுவரை 170 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், 2024 முதல் இன்று வரை கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களில் ஆயிரத்து 65 கிலோ ஹெரோயின், 355 கிலோ கொக்கைன், 659 கிலோ ஐஸ், 913 கிலோ கஞ்சா இவற்றுடன் 151 இலட்சம் போதை மாத்திரைகள் அழிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
‘முழு நாடுமே ஒன்றாக ‘ தேசிய நடவடிக்கையானது, 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





