“முத்தமழை” பாடலால் அனைவரையும் கட்டிப்போட்ட சின்மயி… அவருக்கு ஏன் தடை விதிக்கப்பட்டது?

தக் லைப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சின்மயி பாடிய முத்தமழை பாடல் வைரலான நிலையில், தமிழ் சினிமாவில் அவர் ஏன் இத்தனை காலம் பாடவில்லை, அவரை பாட கூடாது என தடை விதித்தது ஏன் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இயக்குநர் மணி ரத்னம் இயக்கிய கண்ணத்தில் முத்தமிட்டாய் பாடல் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் பாடகி சின்மயி.
கர்நாடக சங்கீதத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட இவர், தமிழை தாண்டி, தெலுங்கு, ஆங்கிலம், இந்தி, ஜெர்மன், மராத்தி ஆகிய மொழிகளை சரளமாக பேசுவார்.
இவர் பாடல்கள் பாடுவதும் மட்டுமில்லாமல், டப்பிங் ஆர்டிஸ் வேலையையும் செய்து வந்தார்.
இதற்கிடையில்தான், தமிழத்தில் #metoo விவகாரம் அதிகம் பேசுபொருளாக மாறியது. இதில், பாடலாசிரியர் வைரமுத்துவிற்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தவர் சின்மயி.
இந்த விவகாரத்திற்கு பிறகு சமூக வலைதளங்களில் கேலி கிண்டல்களுக்கு ஆளாக்கப்பட்டார். இந்தநிலையில், திரைப்பட, தொலைக்காட்டி கலைஞர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்கள் சங்கத்திலிருந்து, அதன் தலைவர் ராதா ரவி இவரை நீக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் பல காலமாக தமிழ் சினிமாவில் பாடல்கள் பாடாமல் இருந்தார். லியோ திரைப்படத்தில் திரிஷாவிற்கு சின்மயி டப்பிங் செய்திருந்தார். ஆனால், இதுவும் இந்த தடையை மீறி பல போராட்டத்திற்கு பிறகுதான் நடந்ததாக கூறப்படுகிறது.
இந்த வரிசையில், மணிரத்னம் இயக்கத்தில் கமல் , சிம்பு , திரிஷா , அபிராமி , அசோக் செல்வன் மற்றும் ஜோஜூ ஜார்ஜ் நடித்துள்ள ” தக் லைஃப்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சமீபத்தில் நடைப்பெற்றது.
இப்படத்தில் இடம்பெற்றுள்ள முத்த மழை பாடலை இந்தி மற்றும் தெலுங்கில் சின்மயி பாடியிருக்கிறார். தமிழில் தீ இந்த பாடலை பாடியுள்ளார்.
இந்நிலையில், ‘தக் லைப்’ படத்தின் ‘முத்த மழை’ பாடலை சின்மயி இசை வெளியீட்டு விழாவில் பாடினார். இதற்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு எழுந்திருக்கிறது .
மேலும், ஒரிஜினல் வெர்ஷனைவிட சின்மயின் குரலில் அருமையாக இருக்கிறது என்றும், இவர் ஏன் இத்தனை காலம் பாடவில்லை. தமிழ் சினிமாவில் பாட ஏன் தடை விதிக்கப்பட்டிருக்கிறது என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும், இந்த பாடலுக்கு நான் முற்றிலும் அடிமையாகிவிட்டேன் என்று இயக்குநர் வெங்கட் பிரபு, பாடகி சின்மயியை புகழ்ந்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.