லண்டனில் பாடசாலையொன்றில் கத்தி குத்து தாக்குதல் – இரு சிறார்கள் ஆபத்தான நிலையில்!
வடமேற்கு லண்டனில் உள்ள பாடசாலையொன்றில் இரண்டு சிறுவர்கள் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக பயங்கரவாத எதிர்ப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
லண்டன் நேரப்படி நேற்று மதியம் கிங்ஸ்பரி உயர்நிலைப் பாடசாலையில் குறித்த கத்தி குத்து சம்பவம் இடம்பெற்றது.
இதில் 13 மற்றும் 12 வயதுடைய இரு சிறுவர்கள் தாக்கப்பட்ட நிலையில் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருவரும் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
“சுற்றுப்புற சூழ்நிலைகள்” காரணமாக, பயங்கரவாத எதிர்ப்பு அதிகாரிகளால் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், இருப்பினும் இது ஒரு பயங்கரவாத சம்பவமாக அறிவிக்கப்படவில்லை என்றும் துப்பறியும் அதிகாரி லூக் வில்லியம்ஸ் ( Supt Luke Williams ) தெரிவித்தார்.
கொலை முயற்சி சந்தேகத்தின் பேரில் 13 வயதுடைய சிறுவன் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், தாக்குதலுக்கு பயன்படுத்திய ஆயுதம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாகவும் வில்லியம்ஸ் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை டெய்லி மெயில் வெளியிட்டுள்ள செய்தியில், தாக்குதலின் போது சந்தேக நபர் “அல்லாஹு அக்பர்” என்று கத்தியதாகக் கூறப்படுகிறது.
பாடசாலையின் தலைமை ஆசிரியர் அலெக்ஸ் தாமஸ் ( Alex Thomas) , இந்த சம்பவம் “முழு பாடசாலை சமூகத்திற்கும் ஒரு ஆழமான அதிர்ச்சிகரமான நிகழ்வு” எனக் குறிப்பிட்டுள்ளார்.




