மனமுருகி தமிழகத்திற்கு நன்றி சொன்ன கமல்

சென்னை: ”தமிழகம் எனக்கு உறுதுணையாக உள்ளது, அதற்காக நன்றி சொல்கிறேன்” என கமல் தெரிவித்துள்ளார். மேலும் கேள்வி கேட்ட நிருபர்களிடம் பிறகு பேசுகிறேன் என தவிர்த்துவிட்டார்.
மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, திரிஷா நடிப்பில் உருவாகி உள்ள தக் லைப் படம் ஜுன் 5ல் பான் இந்தியா படமாக ரிலீஸாகிறது. கன்னடம், தமிழ் தொடர்பான பிரச்னையால் இப்படம் கன்னடத்தில் வெளியாகவில்லை. கோர்ட் மன்னிப்பு கேட்க சொல்லியும் மறுத்துவிட்டார் கமல்.
இந்நிலையில் சென்னையில் நடந்த தக் லைப் பட விழாவில் பேசிய கமல், ‛‛தமிழ் சினிமாவை புரட்டி போடும் அளவுக்கு ஒரு படத்தை எடுக்க ஆசை உள்ளது. இதில் பல வெளிநாட்டு கலைஞர்கள் பணியாற்றி உள்ளனர்.
ராஜ்கமல் நிறுவனத்திற்கு பின்னால் உள்ள இன்டர்நேஷனல் என்ற வார்த்தைக்கான முழு அர்த்தத்தை மணிரத்னம் தந்துள்ளார். இந்தபடம் சர்வதேச அளவில் உருவாகி உள்ளது. உணவு சாப்பிடும் நேரத்தில் நாங்கள் பேசுவது கூட அரட்டையாக இருக்காது, சினிமாவை பற்றிதான் இருக்கும்.
நான் பார்த்த இளைஞர் மணி, இன்று சினிமா ஞானியாக மாறி இருக்கிறார். தமிழகம் எனக்கு உறுதுணையாக உள்ளது, அதற்காக நன்றி சொல்கிறேன். மற்ற விஷயங்களை பிறகு பேசுகிறேன்” என்றார்.
இதற்கிடையே கேள்வி எழுப்பிய நிருபரிடம் கமல் கூறியதாவது: ஒரு நிமிடம், தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். இது வந்து உங்களுக்கு நன்றி சொல்வதும், எங்களது குதூகலத்தை பகிர்ந்து கொள்ளவதற்கு மட்டுமே ஏற்பாடு செய்யப்பட்டது.
நாம் எல்லாரும் உட்கார்ந்து சாப்பிடுவோம். இன்னும் பேச வேண்டியது நிறைய இருக்கிறது. அது தக் லைப் சம்பந்தப்பட்டது இல்லை. அது அப்புறம் பேசுவோம். கண்டிப்பாக, அதற்கு தமிழனாக அதற்கு நேரம் ஒதுக்கித் தருவது என் கடமை. நான் மேடையில் பேசும்போது உயிரே உறவே தமிழே என சொல்வதற்கான அர்த்தத்தை முழுவதுமாக உணர்கிறேன். நன்றி. வணக்கம்