ஜோன்ஸ்டன் மற்றும் அவரது இரண்டு மகன்கள் உட்பட ஐவருக்கு மீண்டும் விளக்கமறியல்
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இரண்டு மகன்கள் உட்பட ஐவர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் வத்தளை நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அவர்களை எதிர்வரும் 23 ஆம் திகதி வரைவிளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சந்தேகநபரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றை முறைக்கேடாக பயன்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் வழக்கறிஞர்கள் அவரை பிணையில் விடுவிக்குமாறு கோரிய போதிலும் நீதவான் அந்தக் கோரிக்கையை நிராகரித்து சந்தேக
நபர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது
சந்தேக நபர்களின் தரப்பில் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் நீதவான் நிராகரித்தார்.
கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராக இருந்த காலத்தில், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தனக்குச் சொந்தமானது என்று கூறப்படும் எத்தனால்
நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கு சதோச லொறியைப் பயன்படுத்தியுள்ளார்.
இதனால் அரசாங்கத்திற்கு 2.5 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில், முன்னாள் அமைச்சரையும் அவரது மகன் ஜோஹன் பெர்னாண்டோவையும் கைது செய்யுமாறு சட்டமா அதிபர் பொலிஸ் நிதிக் குற்றப்
புலனாய்வுப் பிரிவிற்கு அறிவுறுத்தினார்.
இதன்படி, டிசம்பர் 30 ஆம் திகதி, ஜோஹன் பெர்னாண்டோ குருநாகலில் கைது செய்யப்பட்டார்.
முன்னாள் சதோச போக்குவரத்து முகாமையாளர் இந்திக ரத்னமலாலவுடன், சம்பவம் தொடர்பான போலி ஆவணங்களைத் தயாரித்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டார்.





