சிங்கப்பூர் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நோய்த்தொற்று – சுகாதார பிரிவு எச்சரிக்கை
சிங்கப்பூரில் திடீரென சளிக்காய்ச்சல் (Flu) பரவல் அதிகரித்துள்ளமை மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கமாக, ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரையான காலப்பகுதியிலேயே இந்தக் காய்ச்சல் சம்பவங்கள் கணிசமாக அதிகரிக்கின்றன.
எனினும் இம்முறை வழமையை விட நோய்த் தொற்று முன்கூட்டியே மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக சுகாதாரத் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலைமை சிங்கப்பூரில் மட்டும் இல்லை. அண்டை நாடுகளான ஜப்பான், மலோசியா போன்ற நாடுகளில் காணப்படுவதாக மருத்துவ அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சளிக்காய்ச்சலுடன் மருத்துவரை நாடிச் செல்லும் மக்களின் எண்ணிக்கை சுமார் 10 வீதம் வரை அதிகரித்துள்ளதாக மருந்தகங்கள் தெரிவித்துள்ளன. இதனால், அங்கு வழக்கத்தை விடக் கூடுதலான கூட்டம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனைக் கருத்திற்கொண்டு, பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சளிக்காய்ச்சல் தடுப்பூசியை உரிய நேரத்தில் போட்டுக்கொள்வது மிக அவசியம்.
கைகளைக் கழுவுதல், இருமும் போதும் தும்மும் போதும் வாயை மூடுதல் போன்ற நல்ல சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.





