பாடசாலை போக்குவரத்து சேவையை மேலும் திறமையாக பயன்படுத்துவது குறித்து அரசாங்கம் கவனம்
புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் “சிசு சரிய” பாடசாலை போக்குவரத்து சேவையை மேலும் திறமையாக பயன்படுத்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.
இதன் ஒரு பகுதியாக, பாடசாலை மாணவர் போக்குவரத்து சேவையை முறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் அவரது அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
இதன்போது பாடசாலை மாணவர்களின் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்கான அதிகாரங்கள் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ள வரைவு விதிமுறைகள் குறித்தும், அதில் சேர்க்கப்பட வேண்டிய புதிய திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடல் இடம்பெற்றது.
மேலும், பாடசாலை மாணவர்களின் போக்குவரத்துக்கான சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை அறிமுகப்படுத்துதல், மாணவர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்தல், போக்குவரத்தின் போது ஏற்படும் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தல்களைத் தடுத்தல் போன்ற விடயங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
அதேபோன்று, மாணவர்களை ஏற்றிச் செல்பவர்களின் தொழில்முறைத் திறனை மேம்படுத்தி, இந்த சேவையை பொறுப்பான மற்றும் பாதுகாப்பான சேவையாக மாற்றுவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இந்த கூட்டத்தில், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகள் பங்கேற்றனர்.





