பிரபல தமிழ் நடிகர் சென்னைக்குள் வர தடை…

தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக நடிகர் அஜய் வாண்டையார் உள்ளிட்ட 5 பேர் சென்னைக்குள் வர தடை விதிக்கப்படுவதாக காவல்துறை அறிவித்துள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பார் ஒன்றில் அண்மையில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக, சில மாதங்கள் முன்பாக அதிமுக ஐடி விங் முன்னாள் நிர்வாகி அஜய் வாண்டையார் மற்றும் பிரசாந்த், சுனாமி சேதுபதி, தூண்டில் ராஜா ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
அஜய் வாண்டையார் மீது ஏற்கெனவே அடிதடி தகராறு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
தொடர்ந்து அஜய் வாண்டையார் மற்றும் சுனாமி சேதுபதி ஆகியோரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்க பரிந்துரைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவ்விருவரையும் சென்னை மாநகர காவல் ஆணையர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்தார். பின்னர் இருவரும் வெளிவந்தனர்.
இந்நிலையில் தான் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக அஜய் வாண்டையார் உள்ளிட்ட 5 பேர் சென்னைக்குள் வர தடை விதிக்கப்படுவதாக காவல்துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து சென்னை பெருநகர காவல் எல்லைக்குள் நுழைந்து பொதுமக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கக் கூடிய ரவுடிகளை கண்டறிந்து காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன்படி, அஜய் வாண்டையார், நாகேந்திர சேதுபதி, பிரேம்குமார், ராஜா, செல்வபாரதி ஆகிய 5 ரவுடிகள் அடுத்த ஒரு ஆண்டிற்கு சென்னை நகர் பகுதிக்குள் வர கூடாது என சென்னை பெருநகர காவல்துறை தடை விதித்துள்ளது. த
டை விதிக்கப்பட்டுள்ள ரவுடிகள் பெருநகர காவல் நிலைய எல்லைக்குள் நீதிமன்ற வழக்கு தொடர்பாகவோ அல்லது காவல்துறையினர் விசாரணை தொடர்பாகவோ வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை இன்றி வேறு காரணத்திற்காக நுழைந்தால் அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மன்னார்குடியைச் சேர்ந்த அஜய் வாண்டையார் தமிழ் சினிமாவில் சில படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார். நடிகையும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பங்கேற்பாளருமான சனம் ஷெட்டியின் முன்னாள் காதலரான அஜய் அவருடன் ஒரு படத்திலும், இதுதவிர ‘ரெட் அண்ட் பாலோ’ மற்றும் ‘மாய நாரிழை’ ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். இதில் இரண்டு படங்கள் இன்னும் வெளியாகவில்லை.