சைப்ரஸை தளமாகக் கொண்ட பிராந்திய தீயணைப்பு மையத்தை அமைக்க ஐரோப்பிய ஒன்றியம் முன்மொழிவு!

சைப்ரஸை தளமாகக் கொண்ட ஒரு பிராந்திய தீயணைப்பு மையத்தை அமைக்க ஐரோப்பிய ஆணையம் முன்மொழியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மத்திய கிழக்கு நாடுகளுக்கு பெரிய காட்டுத்தீயை எதிர்த்துப் போராடுவதற்கும் உதவும் என்று கூட்டமைப்பின் நிர்வாகக் குழுவின் தலைவர் தெரிவித்தார்.
ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தனது வருடாந்திர உரையில், கோடை காலம் “வெப்பமாகவும், கடுமையாகவும், ஆபத்தானதாகவும்” மாறும்போது காட்டுத்தீயை எதிர்த்துப் போராட “நாமே கருவிகளை வழங்குவது” அவசியம் என்று கூறியுள்ளார்.
“இந்த கோடையில், ஐரோப்பாவின் காடுகள் மற்றும் கிராமங்கள் தீப்பிடித்து எரியும் படங்களை நாங்கள் அனைவரும் பார்த்தோம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒரு மில்லியன் ஹெக்டேர்களுக்கும் அதிகமானவை எரிக்கப்பட்டன. சேதத்தின் அளவு மிகப்பெரியது. அது ஒரு முறை மட்டும் ஏற்படக்கூடியது அல்ல என்பது எங்களுக்குத் தெரியும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.