அயோத்தியின் ராமர் கோயிலுக்கு விஜயம் செய்த எலோன் மஸ்க்கின் தந்தை

தொழில்நுட்ப கோடீஸ்வரர் எலோன் மஸ்க்கின் தந்தை எரோல் மஸ்க் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்குச் சென்று, “அற்புதம்” என்றும், தான் இதுவரை செய்த “சிறந்த காரியங்களில்” ஒன்று என்றும் விவரித்துள்ளார்.
அருகிலுள்ள ஹனுமன்கர்ஹி கோயிலிலும் எரோல் வழிபாடு நடத்தினார். ஆரம்பத்தில் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலையும் பார்வையிட திட்டமிடப்பட்டிருந்தார், ஆனால் இப்பகுதியில் நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக அந்தத் திட்டம் கைவிடப்பட்டுள்ளது.
“நான் இதை பார்க்க வந்ததில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், கோயில் நிறைவடையும் வரை காத்திருக்க முடியாது, பெரிய கோயில், இது உலகின் ஒரு அதிசயம் போன்றதாக இருக்கப் போகிறது,” என்று எரோல் குறிப்பிட்டுள்ளார்.
தனித்தனியாக, இரண்டு கோயில்களையும் பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்தியாவில் எனது அனுபவம் அற்புதமாக இருந்தது. இந்தியாவில் நிறைய நேரம் செலவிட ஆவலுடன் காத்திருக்கிறேன்” தெரிவித்துள்ளார்.
இந்த வருகையின் போது கோயில் நகரத்தில் பாதுகாப்பு அதிக அளவில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.