சமஷ்டியே தமிழர்களின் கோரிக்கை: கனடா தூதுவரிடம் சாணக்கியன் எடுத்துரைப்பு!
இலங்கையின் நீண்டகால இனப்பிரச்சினைக்கு நிலையான அரசியல் தீர்வாக சமஷ்டி அடிப்படையிலான ஆட்சி அமைப்பும், உண்மையான அதிகாரப் பங்கீடும் அவசியம் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் இசபெல் மார்டினை தனிப்பட்ட முறையில் சந்தித்து மேற்கொண்ட விரிவான கலந்துரையாடலின் போதே அவர் இதனை வலியுறுத்தினார்.
இந்தச் சந்திப்பின் போது, இலங்கையில் தமிழ் மக்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கி வரும் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து சாணக்கியன் விரிவாக எடுத்துரைத்தார்.
குறிப்பாக, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி, தொடரும் நில அபகரிப்பு மற்றும் இராணுவ ஆக்கிரமிப்பு, மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புக்கூறாமை போன்ற விடயங்கள் இன்னும் தீர்க்கப்படாமல் தொடர்வதை அவர் சுட்டிக்காட்டினார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் எதிர்நோக்கும் கடுமையான பொருளாதார நெருக்கடிகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.
வேலைவாய்ப்புப் பற்றாக்குறை, முதலீடுகள் இல்லாமை மற்றும் போருக்குப் பின்னரான மறுசீரமைப்புப் பணிகள் முழுமையடையாத நிலை ஆகியவை அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தைப் பெரிதும் பாதித்துள்ளன என்பதை அவர் விளக்கினார்.
பல்வேறு இன, மொழி மற்றும் கலாசாரப் பன்முகத்தன்மையைக் கொண்ட கனடா போன்ற நாடுகள், சமஷ்டி ஆட்சிமுறையின் ஊடாக அதிகாரப் பங்கீட்டை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி வருவதைச் சுட்டிக்காட்டிய சாணக்கியன், அந்த அனுபவங்கள் இலங்கைக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாக அமையும் என்றும் குறிப்பிட்டார்.
இலங்கையில் நிலையான அமைதியை எட்டுவதற்கு நீதி, பொறுப்புக்கூறல், பொருளாதார முன்னேற்றம் மற்றும் சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பங்கீடு ஆகிய அனைத்தும் ஒன்றிணைந்த முறையில் முன்னெடுக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதை இச்சந்திப்பில் சாணக்கியன் எம்.பி. மீண்டும் உறுதிப்படுத்தினார்.




