துல்கர் சல்மானின் “காந்தா” படத்திற்கு தடை விதிக்க வேண்டும்…
எம்.கே.தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு துல்கர் சல்மான் நடிப்பில் எடுக்கப்பட்டுள்ள காந்தா திரைப்படத்துக்கு தடை விதிக்கக்கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்குக்கு பதிலளிக்கும்படி, தயாரிப்பு நிறுவனங்களுக்கும், நடிகர் துல்கர் சல்மானுக்கும் சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எம்.கே.தியாகராஜ பாகவதரின் மகள் வழிப் பேரனும், தமிழக அரசின் இணைச் செயலாளராக பணியாற்றி ஓய்வுபெற்ற 64 வயதான தியாகராஜன் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த படம், தனது தாத்தா எம்.கே.தியாகராஜ பாகவதரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
படத்தின் டீசர் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள நிலையில், நவம்பர் 14 ஆம் திகதி படத்தை வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.
பிரபலங்களின் வாழ்க்கையைப் படமாக எடுப்பதாக இருந்தால், அவர்களின் சட்டப்பூர்வ வாரிசுகளிடம் அனுமதி பெற வேண்டும் .
படத்தில், கதாபாத்திரங்களின் பெயர்களை மாற்றியிருந்தாலும் கூட, அதனை மக்கள் நினைவுகூர முடியும்.

பாகவதர் ஒழுக்கமின்றி வாழ்ந்ததாகவும், கண்பார்வை இழந்ததாகவும், கடைசிக் காலத்தில் வறுமையில் சிக்கி, கடனாளியாக இறந்ததாக படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
மாறாக, அவர் சொந்தமாக பங்களா வைத்திருந்ததாகவும், பிளைமுத் மற்றும் செவ்ரலட் போன்ற விலை உயர்ந்த சிற்றூந்துகளை வைத்திருந்ததாகவும், எந்த கெட்ட பழக்கமும் அவருக்கு கிடையாது என்றும் மனுவில் கூறியுள்ளார்.
அடிப்படை ஆதாரங்கள் இல்லாமல், அவதூறான முறையில் சித்தரித்து தயாரிக்கப்பட்டுள்ள காந்தா படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை நகர ஏழாவது உதவி உரிமையியல் நீதிமன்றம், நவம்பர் 18ஆம் திகதிக்குள் மனுவுக்கு பதிலளிக்கும்படி, படத் தயாரிப்பு நிறுவனங்களுக்கும், நடிகர் துல்கர் சல்மான் ஆகியோருக்கு உத்தரவிட்டு, விசாரணையைத் தள்ளி வைத்துள்ளது.






