ரஷ்யாவின் உயர்மட்ட இராணுவ அதிகாரி மீதான கொலை முயற்சி – தாக்குதல்தாரி கைது!
ரஷ்யாவின் உயர்மட்ட இராணுவ அதிகாரியான விளாடிமிர் அலெக்ஸீவ் (Vladimir Alexeyev) மீதான துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்களை அடையாளம் கண்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படும் நபர் உக்ரேனிய வம்சாவளியைச் சேர்ந்த ரஷ்ய குடிமகன் என்றும் அவர் லியுபோமிர் கோர்பா (Lyubomir Korba) என அழைக்கப்படுவதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
கோர்பா டிசம்பர் மாத இறுதியில் “பயங்கரவாதத் தாக்குதலை நடத்துவதற்காக உக்ரேனிய உளவுத்துறையால் நியமிக்கப்பட்டு மொஸ்கோவிற்கு வந்ததாக ரஷ்ய புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல்தாரி மேற்படி தாக்குதலை நடத்திய சில நிமிடங்களில் நாட்டை விட்டு வெளியேறி ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு பயணித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் அவர் அங்கு வைத்து கைது செய்யப்பட்டு பின்னர் நாடு கடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விளாடிமிர் அலெக்ஸீவ் கடந்த வெள்ளிக்கிழமை மொஸ்கோவின் புறநகர் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்கானார். உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், அறுவை சிகிச்சைக்கு பின் தற்போது சுயநினைவுக்கு திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.





