இலங்கையில் அதிகாலையில் உலுக்கிய கோர விபத்து – மூவர் பலி – இருவர் காயம்

நாரம்மல-குருணாகல் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்த நிலையில் இருவர் காயமடைந்துள்ளனர்.
இன்று அதிகாலை நாரம்மல நகருக்கு அருகில் லொறி ஒன்று இலங்கை போக்குவரத்து சபை பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குருணாகலில் இருந்து நாரம்மல நோக்கி பயணித்த லொறி கட்டுப்பாட்டை இழந்து வீதியின் வலது பக்கத்தை விட்டு விலகியுள்ளது.
இதன் போது கட்டுநாயக்காவிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்துடன் மோதியுள்ளது.
இந்த விபத்தில் லொறியில் பயணித்த ஓட்டுநர், ஒரு ஆண், இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் காயமடைந்து நாரம்மல மற்றும் குருணாகல் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்கள் பொலன்னறுவையை சேர்ந்த 41, 80 மற்றும் 82 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதே லொறியில் பயணித்த 40 வயதுடைய பெண், 16 மற்றும் 9 வயதுடைய இரண்டு சிறுமிகள் குருணாகல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சடலங்கள் நாரம்மல மற்றும் குருணாகல் மருத்துவமனைகளின் பிரேத அறைகளில் வைக்கப்பட்டுள்ளன.
பேருந்தின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நாரம்மல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.