அனைத்து பிள்ளைகளுக்கும் நவீன தொழில்நுட்பக் கல்வி – பிரதமர் அளித்த உறுதி
நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள பிள்ளைகளுக்கு புதிய தொழில்நுட்ப வாய்ப்புகள் கிடைக்கக்கூடிய வகையிலான கல்வி முறையை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பு புர்ஹானி செரண்டிப் கல்லூரியில் இன்று (28) நடைபெற்ற, இலங்கை இளைஞர்களின் தொழில்நுட்பத் திறன்களை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்லும் உலக ரோபோ ஒலிம்பியாட் (WRO) தேசியப் போட்டியின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
இம்முறை போட்டிகளில் நாடு முழுவதிலும் உள்ள பாடசாலைகளில் இருந்து 66 குழுக்கள் பங்குபற்றியுள்ளன. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் மூன்று மடங்கு வளர்ச்சியாகும்.
“Robots Meet Culture” (ரோபோ தொழில்நுட்பம் மற்றும் கலாசாரத்தின் சந்திப்பு) என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்ற இந்தப் போட்டியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டதுடன், உள்நாட்டுக் கலாசாரம் மற்றும் நவீன பொறியியல் தொழில்நுட்பம் கலந்த படைப்புகளை முன்வைத்திருந்தனர்.
இங்கு உரையாற்றிய பிரதமர்,
“வேகமாக மாறிவரும் இன்றைய உலகில் விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய துறைகளில் கவனம் செலுத்துவது ஒரு நாட்டின் தேசிய முன்னுரிமையாக இருக்க வேண்டும்.
உலக ரோபோ ஒலிம்பியாட் போன்ற வாய்ப்புகள் ஊடாக எமது இளைஞர் தலைமுறைக்கு தர்க்கரீதியான சிந்தனை, புத்தாக்கம் மற்றும் ஒத்துழைப்பு போன்ற அத்தியாவசிய திறன்களைப் பயிற்றுவிப்பதற்கு சிறந்த சந்தர்ப்பம் கிடைக்கிறது.
2025 ஆம் ஆண்டில் இலங்கை முதன்முறையாக சிங்கப்பூரில் நடைபெற்ற சர்வதேச ரோபோ ஒலிம்பியாட் போட்டியில் இரண்டு குழுக்களைப் பங்கேற்கச் செய்தமை எமது பிள்ளைகளுக்குக் கிடைத்த மிக முக்கியமான அனுபவமாகும்.”
நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள பிள்ளைகளுக்கு இவ்வாறான தொழில்நுட்ப வாய்ப்புகள் கிடைக்கும் வகையிலான கல்வி முறையை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம்” என்றார்.





