குடியுரிமை சட்டத்தில் மாற்றம் – கனடா வாழ் புலம்பெயர் தமிழர்களுக்கு கிடைத்த வாய்ப்பு!
கனடா தனது குடியுரிமை விதிகளை நவீனமயமாக்க உள்ளது. இது ஆயிரக்கணக்கான இந்திய வம்சாவளி குடும்பங்கள் மற்றும் வெளிநாட்டில் பிறந்த பிற கனேடியர்களுக்கு பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கனடாவின் குடிவரவு அமைச்சர் லீனா மெட்லேஜ் டயப் ( Lena Metlege Diab) கூறுகையில், நமது குடியுரிமைச் சட்டங்களில் நீண்டகாலமாக நிலவும் சிக்கல்களைச் சரிசெய்து, வெளிநாட்டில் பிறந்த அல்லது தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு நியாயத்தை கொண்டுவரும் வகையில் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது முந்தைய சட்டங்களால் குடியுரிமையை இழந்த மக்களுக்கு குடியுரிமை வழங்கும் எனவும், புதிய மாற்றங்கள் கனேடிய குடியுரிமையை வலுப்படுத்தி பாதுகாக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை கனடா (IRCC) 2009 இல் அறிமுகப்படுத்திய சட்டத்தின்படி, குறைந்தபட்சம் ஒரு பெற்றோராவது கனடாவில் பிறந்திருந்தால் மட்டுமே வம்சாவளியின் அடிப்படையில் பிள்ளைகளுக்கு குடியுரிமை வழங்கப்படும்.
ஒன்ராறியோ உயர் நீதிமன்றம் இந்த விதியை அரசியலமைப்பிற்கு முரணானது என்று தீர்ப்பளித்தது. மத்திய அரசு இந்த முடிவை ஏற்றுக்கொண்ட நிலையில் மேல்முறையீடு செய்யவில்லை.
இதன்காரணமாக பெரும்பாலானவர்களுக்கு குடியுரிமை கிடைக்கப் பெறவில்லை. அவர்கள் சட்டங்களால் விலக்கப்பட்டவர்களாக அல்லது குடியுரிமை இழந்தவர்களாக அடையாளப்படுத்தப்பட்டிருந்தனர்.
ஆனால் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பில் C-3 திட்டமானது, பழைய கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குடியுரிமை வழங்குகிறது.
இந்த விதியின் கீழ், வெளிநாட்டில் பிறந்த ஒரு கனேடிய பெற்றோர், குழந்தை பிறப்பதற்கு அல்லது தத்தெடுப்பதற்கு முன்பு குறைந்தது 1,095 நாட்களை கனடாவில் கழித்திருந்தால், அவர்களின் குழந்தைக்கு குடியுரிமை வழங்க முடியும்.
இந்த வரம்பு அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ள குடியுரிமை நடைமுறைகளுடன் ஒத்துப்போகிறது.





