கூலிக்காக ஒரு ரூபாய்கூட வாங்கவில்லை: ஆமீர் கான்

கூலி திரைப்படத்தில் சம்பளம் எதுவும் வாங்கவில்லை என ஆமீர் கான் தெரிவித்துள்ளார்.
லோகேஷ் – ரஜினி கூட்டணியில் வெளியான கூலி திரைப்படம் கதை, திரைக்கதையால் ரசிகர்களிடம் எதிர்மறையான விமர்சனங்களையே பெற்றுள்ளது. இருந்தும், முதல்நாள் வசூலாக உலகளவில் ரூ. 151 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
அதேநேரம், பல லாஜிக் பிரச்னைகள் இருப்பதால் இப்படத்தைக் கேலி செய்தும் பதிவிட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, இப்படத்தில் நடிகர் ஆமீர் கான் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க ரூ. 20 கோடியைச் சம்பளமாகப் பெற்றதாகத் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், இதுகுறித்து பேசிய ஆமீர் கான்,
“கூலி திரைப்படத்தில் நான் ரூ. 20 கோடி சம்பளம் பெற்றதாகத் தவறான தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் மேல் பெரிய அன்பும் மரியாதையும் வைத்திருக்கிறேன். அவருடன் நடித்ததே பரிசுதான். அதனால், சம்பளம் என எதுவும் வாங்கவில்லை. சொல்லப்போனால், அதைப்பற்றி யோசிக்கவும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.