வானில் தோன்றப் போகும் இரத்த நிலா – ஏற்படவுள்ள முழு சந்திர கிரகணம்

எதிர்வரும் 14ஆம் திகதி சந்திர கிரகணத்தின்போது, சில நேரங்களில் நிலவு சிவப்பாக மாறும் நிகழ்வும் ஏற்படும் என கூறப்படுகின்றது.
பொதுவாக சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. பூமி சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் நேரடியாக வரும்போது இந்நிகழ்வு நிகழ்கிறது. அப்படியான இந்த அற்புத நிகழ்வு வரும் மார்ச் 14ஆம் திகதி நடைபெற இருக்கிறது.
சூரிய ஒளியில் உள்ள ஏழு நிறங்களில் முதலில் உள்ள வயலட், இண்டிகோ, புளூ உள்ளிட்ட நிறங்கள் குறைந்த அலை நீளம் கொண்டதால் சிதறடிக்கப்படுகிறது. அடுத்துள்ள நிறங்களில் சிவப்பு அதிக அலை நீளம் கொண்டதால், சிதறடிக்கப்படாமல் இருக்கும்.
அதாவது, இயற்பியலில் சூரிய உதயம், சூரிய அஸ்தமனத்தின் போது சூரியன் எப்படி சிவப்பு நிறமாக காட்சி அளிக்கிறதோ… அதே கோட்பாடைக்கொண்டு தற்போது வர இருக்கும் சந்திரகிரகணமும் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும்.
சந்திரனை மறைத்திருக்கும் பூமி, தன் மீது விழும் ஒளியை வளிமண்டலம் மூலமாகச் சிதறடிக்கிறது. அவ்வாறு சிதறடிக்கப்படும் நிறங்களில் சிவப்பு அப்படியே தங்கி, நிலவின் மீது விழும். இதுவே ரத்த நிலவாக தெரிவதாக நாசா விளக்கமளித்துள்ளது. மார்ச் 14ஆம் தேதி நடைபெறும் இந்த முழு சந்திர கிரகணம் இந்தியாவில் தெரியாது.
ஆனாலும், இந்திய வானியல் ஆர்வலர்கள் வரும் செப்டம்பர் 7, 8 திகதிகளில் முழு சந்திர கிரகணத்தை எதிர்பார்க்கலாம். இது, 2022ஆம் ஆண்டுக்குப் பிறகு மிக நீண்ட முழு சந்திர கிரகணமாக இருக்கும். இது ஒரு மணி நேரம் 22 நிமிடங்கள் நீடிக்கும்.
இக்கிரகணத்தை சென்னை உள்ளிட்ட தமிழகப் பகுதிகளில் தெளிவாகக் காணலாம். அதே நேரத்தில் மார்ச் 14ஆம் தேதி காணும் சந்திர கிரகணத்தை, அண்டார்டிகவின் சில பகுதிகள், ஆப்ரிக்காவின் மேற்குப் பகுதி, அமெரிக்கா, வடக்கு ஜப்பான், கிழக்கு ரஷ்யா உள்ளிட்ட பகுதிகளில் காண முடியும். இதை இந்தியாவில் உள்ளவர்கள் சமூக ஊடகத் தளங்களின் நேரடி ஸ்ட்ரீம்கள் மூலம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.