செம்மணி புதைகுழிக்குள் இருந்து 90 ஆயிரம் லீற்றர் நீர் வெளியேற்றம்!
யாழ். செம்மணி மனிதப் புதைகுழிக்குள் Chemmani mass grave தேங்கி நின்ற மழை நீரை வெளியேற்றும் நடவடிக்கை இன்று (09) முன்னெடுக்கப்பட்டது.
செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரையில் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின் போது, 240 மனித என்புக்கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டன.
இவற்றில் 239 என்புக்கூட்டு எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
மூன்றாம் கட்ட அகழ்வாய்வுப் பணிகளை முன்னெடுக்க இருந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் முதல் யாழ்ப்பாணத்தில் பல்வேறு தடவைகள் கடும் மழை பெய்தமையால் , புதைகுழிக்குள் மழைநீர் தேங்கி நிற்கின்றது.
இந்நிலையில் புதைகுழிக்குள் தேங்கி நிற்கும் மழை நீரை வெளியேற்றும் நடவடிக்கை இன்று நல்லூர் பிரதேச சபையின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டது.
அதன்போது சுமார் 90 ஆயிரம் லீற்றருக்கும் மேலான நீர் புதைகுழியில் இருந்து பவுசர் ஊடாக வெளியேற்றப்பட்டது.
மழை நீரை வெளியேற்றிய பின்னர் புதைகுழி சேற்றுத் தன்மையாக காணப்படுவதால், அடுத்த கட்ட அகழ்வுப் பணிகளை முன்னெடுப்பது தொடர்பில் எதிர்வரும் மார்ச் மாதம் 16ஆம் திகதி தீர்மானிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதைகுழிக்குள் இருந்து வெள்ள நீரை வெளியேற்றும் நடவடிக்கையை யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ்.லெனின்குமார், சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன், சட்டத்தரணிகளான நிரஞ்சன், ஞா.ரஜித்தா உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் இன்று நேரில் சென்று பார்வையிட்டனர்.





