ஜே.வி.பியுடன் விமல் அரசியல் போர்: கடும் விமர்சனக் கணைகள் தொடுப்பு!
ஜே.வி.பியானது அதன் ஆரம்பகால கொள்கைகளில் இருந்து தற்போது திசைமாறி பயணித்துக்கொண்டிருக்கின்றது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.
கொழும்பில் இன்று (20) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணி எனப்படும் ஜே.வி.பி. ஊடாகவே தனது அரசியல் பயணத்தை விமல் வீரவன்ச ஆரம்பித்தார்.
எனினும், அவரின் சர்ச்சைக்குரிய நடவடிக்கை காரணமாக அவரை கட்சியை விட்டு வெளியேறும் முடிவை ஜே.வி.பி. எடுத்திருந்தது. அதற்கு முன்னதாகவே அவர் பதவி விலகி, தேசிய சுதந்திர முன்னணி எனும் புதிய கட்சியை ஆரம்பித்தார்.
அத்துடன், மஹிந்த அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சு பதவிகளையும் பெற்றுக்கொண்டார். கடந்த பொதுத்தேர்தலில் அவர் போட்டியிடவில்லை.
தேசிய மக்கள் சக்தி ஆட்சி மலர்ந்த பின்னர் ஜே.வி.பிமீது விமல்வீரவன்ச கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றார்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் கூறியவை வருமாறு,
“நான் இருந்த காலத்தில் இருந்த ஜே.வி.பி. அல்ல தற்போது காணப்படுகின்ற கட்சி. செயல் என்பதைவிட வாய்சொல் வீரர்களாகவே அக்கட்சியினர் செயல்படுகின்றனர்.
அதுமட்டுமல்ல இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு சார்பாக செயல்படும் நிலைமையே காணப்படுகின்றது. தெளிவானதொரு கொள்கையும் அக்கட்சியினரிடம் இல்லை.
கட்சி தலைமையகத்தலி; புரட்சியாளர்களின் படங்களை மட்டும் வைத்துக்கொண்டு, அவர்களின் கொள்கைகளுக்கு முற்றிலும் மாறுபட்ட விதத்தில் பயணித்துக்கொண்டிருக்கின்றனர்.” என்றார்.





